Skip to content

பெருமூச்சு

பின்னால் சொன்ன கதைகள்

சோ. தர்மன் எழுதிய பெருமூச்சு - கரிசல் மக்களின் வாழ்வையும், நிலத்தின் அழகையும் சித்தரிக்கும் சிறுகதைத் தொகுப்பு. வாசிப்பவர்களுக்கு ஒரு புதிய அனுபவம்.

Category Short Story
Publisher அடையாளம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 128
Year 2024
Format Paperback
Tags Life and Society → Rural Living

Description

சோ. தர்மன் சிறுகதைகளின் முழுத் தொகுப்பு ‘நீர்ப்பழி’ வெளியாகி, பின்னால் எழுதப்பட்ட கதைகளாகப் ‘பெருமூச்சு’ உருவாகியிருக்கிறது.

இதிலுள்ள கதைகளின் தானியத்துக்குள் நழுவி மறைந்த பாம்படம் திரும்பிவந்து கதை போடத் துவங்கிவிட்டது - பாட்டியின் குரல் வளையில். பாட்டியின் சுருக்கம் விழுந்த கோடுகள் பட்ட முகத்துக்குள், கவனமாகச் சென்று அவளுடைய முகத்தை வாசிப்போமானால், மறைந்திருக்கும் கரிசல் வெளியின் நிலத் தோற்றங்களைப் பன்முகக் கதைகளினூடாக நிலங்களின் வாசனைகளோடு காண்பீர்கள்.

சோ. தர்மனின் கதைகளில் கிளிகள் கொஞ்சும் மரத்தின் பச்சை சரீரம் நிலவில் படர்ந்து அலைய, எல்லா உயிரினங்களும் பிறந்துகொண்டே இருக்கின்றன; தூக்கணாங்குருவிகள் மெல்லிய சருகுகளால், நூறு நூறு வகைக் கோரை நார்களால் கூடமைப்பது போல, இவருடைய எழுதும் விரல்களுக்கிடையில் பின்னப்பட்ட கதாபாத்திரங்களின் சிருஷ்டிகரம் அவை; சாம்பல் புள்ளிவைத்த குருவி, முட்டைகளை அடைகாப்பது போல, கதைகளின் தொனிகளை விதவிதமாய் ஒலிக்கும் பட்சி ஜாலங்களாக அசைகின்றன; ஒவ்வொரு பக்கத்திலும் பல வண்ண இறகுகளாக, உதிர்ந்து மிதந்து வந்து, கதாசிரியரின் விரல்களுடன் சேர்ந்து, கதைகளை எழுதிக்கொண்டிருக்கின்றன.

சோ. தர்மனின் கையெழுத்துப் பனுவல்களை வாசிக்கும் முறை ஒருவருக்கொருவர் மாறுபட்டிருக்கும் வட்டார மொழிகள்; வழக்காறுகளில் நகரும் வட்டச் சுழற்சிகள்; ஊர்களாகவும், திணைகளின் மாறுபட்ட காடுகளாகவும், மரங்களாகவும், உரிப்பொருள் கருப்பொருளாகவும் நிலத்துக்கே உரிய பட்சிசொல் மந்திரமாய் இறைச்சி கொண்டுள்ளன.

ஒரு குறுநாவலுடன் பன்னிரண்டு சிறுகதைகளைக் கொண்ட ‘பெருமூச்சு’ புத்தகத் துளைகளில் கேட்கிறது. இந்தப் புத்தகத்திலிருந்து உருண்டோடி வந்த அத்தனை வகை தானியங்களும் வாசிப்பவனின் விரல்களுக்கு இடையில் கதிர்களாய் வளர்ந்து, படைக்குருவிகள் என வாசகனைத் தொட்டுத் திரும்பி, புத்தக மடிப்புக்குள் சப்தமிட்டபடி அடைந்து கிடக்கின்றன.

- கோணங்கி