வியட்நாமில் அமெரிக்கப் போர்: வென்றது யார்?
நாகேஸ்வரி அண்ணாமலை எழுதிய வியட்நாமில் அமெரிக்கப் போர்: வென்றது யார்? - வியட்நாம் போர், ஏகாதிபத்திய எதிர்ப்பு, விடுதலைப் போராட்டம் குறித்த கள ஆய்வு புத்தகம்.
| Category | Report |
|---|---|
| Publisher | அடையாளம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 336 |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
தென்கிழக்கு ஆசியாவில் இந்தோசீனக் குடாவுக்குக் கிழக்கே அமைந்துள்ள நாடு வியட்நாம். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடந்த போர்களில் வியட்நாமின் கொரில்லா போர் இன்றளவும் முக்கியமானதாகப் பேசப்படுகிறது.
இந்தப் புத்தகத்தில் சமூகவியலாளர் நாகேஸ்வரி அண்ணாமலை தமது நேரடிக் கள ஆய்வு மூலம் வியட்நாமில் நடந்த அமெரிக்காவின் போரை நமக்கு விளக்குகிறார்.
முதல் பகுதியில் தமது வியட்நாம் பயணத்திற்கு நம்மையும் அழைத்துச் செல்லும் நூலாசிரியர், வியட்நாமின் முந்தைய வரலாற்றையும் சொல்கிறார். வியட்நாமில் சீன, பிரெஞ்சு காலனி ஆதிக்கக் கொடுமைகளையும், அவற்றுக்கு எதிராக வெகுண்டெழுந்த மக்கள் போராட்டத்தையும், பிறகு அங்கு அமெரிக்கா நுழைந்த கதையையும் நம் மனதில் காட்சிப்படுத்துகிறார்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் வியட்நாம் நடத்திய போரை இரண்டாம் பகுதியில் சொல்கிறார் நாகேஸ்வரி. கென்னடி தொடங்கிய போரை ஜான்ஸன் எவ்வாறெல்லாம் கொண்டு சென்றார்; வெல்லவும் முடியாமல் தோற்கவும் பிடிக்காமல் எப்படி ஊசலாடினார்; நிக்ஸனின் அரசியல் சூழ்ச்சிகள் எப்படி வீழ்ச்சியில் முடிந்தன போன்ற கதைகள் கேட்பதற்கு ஆர்வத்தைத் தூண்டுகின்றன. மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னெடுத்த ஹோ சி மின்னின் ஆளுமையைப் பற்றிப் போருக்குப் பிறகும் நம்மைச் சிந்திக்க வைக்கிறது இந்தப் புத்தகம்.
போரால் ஏற்பட்ட இழப்புகள் பொருளற்றுப் போன போது, அமெரிக்க ஜனாதிபதிகள் மக்களிடம் சொல்லிக்கொண்டிருந்த பொய்கள் ஏகாதிபத்தியத்தின் இரட்டை வேடத்தை அவிழ்த்துக் காட்டுகின்றன; ஏகாதிபத்தியத்தின் தந்திரங்களையும் இந்தப் புத்தகத்தில் நீங்கள் படிக்கலாம்.
இருப்பினும், அமெரிக்காவைப் போர்க்களத்தில் வென்ற வியட்நாம் இன்று எந்த வகையான பொருளாதாரத்தைப் பின்பற்றுகிறது?
விடுதலைப் போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, கம்யூனிஸம் போன்றவற்றில் அக்கறையுள்ளவர்கள் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம்.
