ஆமை காட்டிய அற்புத உலகம்
யெஸ். பாலபாரதி எழுதிய ஆமை காட்டிய அற்புத உலகம் - கடல் சாகசங்கள், சுற்றுச்சூழல் தகவல்கள் மற்றும் சிறார் இலக்கிய அனுபவம் நிறைந்த நாவல் இது.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Adventure and Exploration |
Description
கவிதைகள், சிறுகதைகள், நாவல், பத்திரிக்கை செயல்பாடுகள், சிறப்புக் குழந்தைகள் குறித்தான நூல்கள், ஆகிய தன் படைப்பு அனுபவங்களை எல்லாம் ஒரு தூரிகையின் இழைகளாகக் கொண்டு இந்த சிறார் நாவலை தீட்டியிருக்கிறார் யெஸ். பாலபாரதி. குழந்தைமையை ஆராதிக்கும் பேருவகையிலிருந்து, களிப்பூட்டிக் கற்பிக்கும் கனிவிலிருந்து உருவாகியிருப்பது இது. இயற்கையின் இயல்போடு சிறார் மனதை இசையவைக்கிற முயற்சி. ஆமையுடன் ஆழ்கடலுக்கு அழைத்துச் சென்று காரணங்களை கதையாய் கூறி கரை சேர்க்கும் கலையாகியிருக்கிறது இந்தப் படைப்பு. சிறார் படைப்பாளியாக முகிழ்த்திருக்கும் பாலபாரதியின் வருகை முக்கியமானது. சிறார் இலக்கிய தளத்தில் அவரால் அரியன நிகழும் என்பதை நான் உறுதியுடன் அறிகிறேன். வருக பாலபாரதி!
- யூமா வாசுகி
சாகசம் பிடிக்காத குழந்தைகள் இருக்க முடியுமா? இந்தக் கதையில் கடல் எனும் அற்புதங்களும் மர்மமும் நிரம்பிய உலகத்தில் சாகசங்கள் நடைபெறுகின்றன. ஜூஜோ, டாங்கோ உள்ளிட்ட கடல் உயிரினங்களுடன் குழந்தைகளும் சேர்ந்துகொள்கிறார்கள். கடல் சூழலியல் பற்றிய முக்கிய தகவல்களையும் கதையுடன் இணைத்துத் தந்திருப்பது சிறப்பாக உள்ளது. யெஸ்.பாலபாரதி எழுதிய இந்தக் குறுநாவலை, புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ளது.
சிறார் நாவல் உலகில் ஓரு புதிய வரவு, ‘ஆமை காட்டிய அற்புத உலகம்’. ஜூஜோ என்ற ஆமையுடன் சிறுவர்கள் மேற்கொள்ளும் ஒரு சாகசப் பயணத்தை விவரிப்பதுதான் இந்த நாவல். சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் எப்போதும் வசீகரிப்பது கடல். கடலும் அதன் அற்புதங்களும் கேட்கச் சலிக்காதவை. அத்தகைய விரிவானதொரு பின்புலத்தில் கடலுக்குள்ளே சென்று நாமே பார்க்கிற நேரடி அனுபவத்தைத் தருகிறது இந்நாவல்.
கடல்வாழ் உயிரினங்கள், அவற்றின் வாழ்க்கை முறை, கடலை மாசுபடுத்தி அதன் தூய்மையைக் கெடுக்கும் பொருட்கள், சுற்றுச்சூழல் எனப் பல தகவல்களை இந்தக் கதையின் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது. கதையைச் சொல்லிக்கொண்டு போவதோடு ஒவ்வொரு அத்தியாயத்திலும் சிறப்புத் தகவல்களும் பெட்டிச் செய்தியாக இடம்பெற்றிருக்கின்றன. எந்த இடத்திலும் தொய்வில்லாமல் ஜாலியான நடையில் சிறார் மனம் கவரும்படி எழுதியிருக்கிறார் நூலாசிரியர். கி. சொக்கலிங்கத்தின் பொருத்தமான ஓவியங்கள் நாவலுக்குக் கூடுதல் அழகு சேர்க்கின்றன.
