நிற்க நிழல் வேண்டும் (எழுத்து பிரசுரம்)
வாஸந்தி எழுதிய நிற்க நிழல் வேண்டும் - ஈழப் போர், இந்திய-இலங்கை ஒப்பந்தம் குறித்த ஆழமான நாவல். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், ஒரு முக்கியமான வரலாற்றுப் பதிவு.
| Category | Novel |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Zero Degree) |
| Language | தமிழ் |
| Pages | 230 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
வாஸந்தி, குண்டுச்சட்டியில் குதிரையோட்டுகிற ரகமல்ல. இருந்த இடத்தைவிட்டு அசையாமல் அவர் எதையும் எழுதிவிடவில்லை. ‘மௌனப்புயல்' உருவாகும் முன் அவர் பஞ்சாபுக்குச் சென்றார். பொற்கோயிலில் ராணுவம் புகுந்திருந்த தருணம் அது. உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருந்த சமயம். ஆயினும் அவர் துணிவுடன் பல இடங்களுக்குச் சென்று, பலரைப் பார்த்துப் பேசி, பிரச்சினைகளை மட்டுமின்றி அவற்றுக்குக் காரணமான உள்ளங்களையும் படித்தறிந்தார். பிறகு தான் எழுதினார். “நிற்க நிழல் வேண்டும்” என்ற இந்த நாவலை எழுதுவதற்கு முன்னரும் அவர் இலங்கைக்குச் சென்றார். கொழும்பில் அதிகார வர்க்கத்தினரை மட்டுமின்றி, இந்தியத் தூதரையும் பார்த்துப் பேசினார். வடக்கு-கிழக்கு பகுதிகளில் போராளிகளின் பல்வேறு பிரிவினரையும் சந்தித்தார். பிற நாடுகளில் அவர்களுக்கு உள்ள ஆதரவாளர்களைத் தேடிச் சென்று அளவளாவினார். சராசரி ஈழத் தமிழரையும், அடைக்கலம் என்று இந்தியாவுக்கு வந்து சேர்ந்த அகதிகளையும் கண்டு, அவர்களுடைய உருக்கமான கதைகளைக் கேட்டறிந்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக உதவிய தில்லி அதிகாரிகளையும் அவர் விட்டு வைக்கவில்லை. இவற்றிலிருந்து அவருக்குக் கிடைத்த மலைபோன்ற தகவல்களை வடிகட்டி முக்கியமான எதையும் விட்டுவிடாமல் நாவலில் பயன்படுத்தி இருக்கிறார்.
- கி. இராஜேந்திரன், ஆசிரியர், கல்கி
