Skip to content

ரவிக்கைச் சுகந்தம்

ஜான் சுந்தர் எழுதிய ரவிக்கைச் சுகந்தம் - கவிதைகளில் தனித்துவமான அனுபவம், செபியா நிறத்தின் அழகும், வாழ்வின் ஆழமான அர்த்தங்களும் நிறைந்த கவிதைத் தொகுப்பு.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 72
Year 2019
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

‘ஜான் சுந்தரின் பியானோ வெட்கமில்லாதது. ஆனால் அவர் சமதளப் படிகளில் இறங்கும் வித்தை தெரிந்த பியானோ கலைஞன். பேருந்தில் நம் மடியில் இருக்கும் மரக் கன்றைத் தயங்கித் தொடும் சிறுமி, ஒரு கணத்தில் அவளைத் தொடத் தளிர்க் கை நீட்டும் மரக்கன்று இரண்டும் அவர்.

சடுதியில் ஐந்து மார்புகள் முளைக்கும் பெண்ணின் சித்திரம் அவர் நடுச் சுவரில் வரைந்த ஒன்று.

கணத்தைப் புழுதியில் புரட்டித் தின்னத் தரும் அவருடைய வரிகள் அந்தரவெளிகளில் செபியாவைத் தேடுகின்றன. இது அவருடைய செபியா நிறச் சொந்த ரயில். செபியா நிற பிஸ்கட்
நிலா. செபியா நிறச் சுகந்தம். மற்றும் செபியா நிறச் செபியா.

- வண்ணதாசன்

‘தனித்திருப்பவனின் காதில் திடீரென விழுந்து சூழலை மாற்றும் தேன்சிட்டின் கூரிய கீச்சொலிகள் போல, வாசிப்பவரின் எல்லாப் புலனுக்குள்ளும் நுழைந்து நலம் விசாரித்து அமைதி படர்த்தும் கவிதைகள் இவை. அப்படியொரு கனவமைதிக்குள் ஆழும் போது, காகங்களின் மரண கானா போல மனம் பேதலிக்கச் செய்பவர்கள், ஜான்சுந்தரின் கவிதை மனிதர்கள். தானியங்கிப் பண இயந்திரங்களைக் கிழட்டு பூதங்கள் என நெருப்பாய் பெரு மூச்சுகள் விட்டபடி காவல் காக்கும் முதியவர்கள், பதறப்பதற பொதியை வாங்கி கனலை அணிந்து பறக்கும்,பசிப்பிணி தீர்க்கும் சிறு தெய்வங்களான ஸ்விக்கிப் பையன்கள், நாலங்குல பிரஷ்ஷால் சுவர்களில் வர்ணம் பூசி டர்பன்டைனில் வாழ்வைக் கழுவிக்கொள்பவர்கள் என, உப்புக்கடலை ரப்பைக்குள் ஒளித்து வைக்கும் அவரின் கவிதை மனிதர்கள் நம் மன அமைதியைக் குலைப்பவர்களும் கூட.

ஏதிலிகளின் ஆண்டவர் தன் முன் பிரார்த்திக்கும் எளிய ஜனங்களின் வார்த்தைகளனைத்தையும் இந்தக் கவிஞனின் நாவில் தோன்றச் செய்திருக்கிறார். அவை சாரங்கி வில்லின் இசைக்கு முன் தோளுயர்த்தி எதிர்க்கிறவனைத் தோற்று அழச் செய்பவை. சில கணங்கள் பொறுத்தால் அழுகையை வெல்ல தீக்காய்ச்சப்படும் அவரது பறையில் இசையாயும் துடித்தெழும்.

கடக்கும் ஒவ்வொரு இறந்த கணமும் நிகழ்வுகளை கறுப்பு வெள்ளை நினைவுகளாக்குவதை செப்பியா டோன் படங்களாக்கி காலாதீதம் தாண்ட செப்பியா குதிரயேறும் ஜான் சுந்தர், ஒலிவாங்கியை அரங்கம் ருசிக்கும் ஐஸ்க்ரீமாக்கும் தேர்ந்த இசைஞனும் கவிஞனுமாக இருப்பது தமிழின் கொடுப்பினை.’

- கலாப்ரியா