Skip to content

இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி?

குருபிரியா எழுதிய இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி? - இயற்கை பேரிடர்கள், பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விரிவான வழிகாட்டி.

Category Essay
Publisher விகடன் பிரசுரம்
Language தமிழ்
Format Paperback
Tags Science and Knowledge → Environment and Ecology

Description

மனிதன் இந்த உலகில் உயிர்வாழ்வதற்குத் தேவையான பல செல்வங்களை இயற்கை வாரி வழங்குகிறது. நாம் சுவாசிக்கும் காற்று முதல் பொருளாதார அடிப்படையில் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து மூலப்பொருட்களையும் அளிப்பது இயற்கைதான். அந்த இயற்கை பல விந்தைகளையும் வினோதங்களையும் உள்ளடக்கியது. எப்போது என்ன நிகழும் என்பது தீர்க்கமாக கண்டறியப்பட முடியாது என்பது உண்மைதான். ஆனால், வாழ்ந்தே ஆகவேண்டும் என்பதற்காக, விஞ்ஞானத்தின் மூலமாக வருமுன் காக்க வழிகள் பல கண்டிருக்கிறோம் என்பதும் கடந்த கால அனுபவங்களின் பதிவு. அமிர்தமே ஆனாலும் அளவுக்கு மீறினால் ஆலகால விஷம் என்பார்கள். இது கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன வார்த்தையாக இருந்தாலும், மறுக்கமுடியாத உண்மை என்பதை மறந்துவிடக் கூடாது. கனிம வளங்கள் சுரண்டப்படுவதாலும், வளர்ந்து வரும் மக்கள்தொகை பெருக்கத்துக்கேற்ப, நிலத்தடி நீராதாரங்களான நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதாலும், வனங்கள் அழிக்கப்படுவதாலும் இயற்கை சீர்குலைக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்பாடுகளால் உலகம் முழுவதையும் இயற்கைப் பேரிடர் அச்சுறுத்தி வருகிறது. இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகள் எப்படி இருக்கும், இதுவரை எப்படிப்பட்ட பேரழிவுகளை உலகம் எதிர்கொண்டு இருக்கிறது என்பது போன்ற தகவல்களையும், நாம் கடைபிடிக்கவேண்டிய பாதுகாப்பு வழிகளையும் இந்த நூலின் ஆசிரியர் குருபிரியா புள்ளிவிவரங்களோடு எழுதியிருக்கிறார். தானாகவே எப்போதோ ஒருமுறை இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக நிகழ்ந்துகொண்டு இருந்த பேரிடர்கள், அடிக்கடி நிகழும் சூழலுக்கு நாமும் ஒரு காரணம் என்பதைக் கவனத்துக்கு கொண்டுவருகிறார். புவி வெப்பமயமாதல், வறட்சி ஏற்படுதல், கடல் அலைகளின் சீற்றம், சூறாவளி போன்ற பேரழிவுகள் ஏற்படுத்தும் இயற்கைச் சீற்றங்கள் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாலும் விளையும் என்பதை இந்த நூலின் மூலம் அழகாக உணர்த்துகிறார். வருங்காலத் தலைமுறையினரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இயற்கை வளமிக்க பசுமையான சோலைகள், காடுகள், புல்வெளிகள், பயிர் நிலங்கள், ஆறுகள், ஏரிகள், கடலோர நீர் வளம் ஆகியவற்றை அழிவிலிருந்து பாதுகாப்பது நமது கடமை என்பதையும் ஆணித்தரமாக விளக்கியுள்ளார். மொத்தத்தில் நாளைய உலகம் நம் கையில் என்பதை உணர்த்தும் இந்த நூல் அனைவரும் படித்து பின்பற்ற வேண்டிய வழிகாட்டி.