Skip to content

இராஜேந்திர சோழன்

கங்கை கொண்ட மாமன்னரின் வீர வரலாறு

ம. இராசசேகர தங்கமணி எழுதிய இராஜேந்திர சோழன் - சோழர் வரலாறு, வீரத்தையும், கங்கை கொண்ட சோழனின் சாதனைகளையும் ஆதாரங்களுடன் தெரிந்து கொள்ளுங்கள்.

Category History
Publisher விகடன் பிரசுரம்
Language தமிழ்
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

வரலாறும், இலக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இரண்டும் மக்கள் வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை.இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் இருந்த மக்களின் சமூக, அரசியல், பொருளாதார, சமய வாழ்க்கையை அறிய இலக்கியங்கள் உதவும். ஆனால், இவை எந்தக் காலத்தில் நடந்தன என்பதற்குத் தக்க சான்றுகள் வேண்டும். சங்க இலக்கியங்கள் சோழர் வரலாறு பற்றிய பல அரிய செய்திகளைக் கூறுகின்றன.

தமிழ் மொழியிலுள்ள கலம்பகம், உலா, பரணி, கோவை, தல புராணங்கள், காப்பியம் போன்ற நூல்கள் வரலாற்றுக்குப் பேருதவி புரிகின்றன. தமிழகத்தில் இலக்கிய, இலக்கண நூல்கள் பெருகியது பிற்காலச் சோழர் காலத்தில்தான். சைவத் திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி வாழ்ந்ததும், பன்னிரண்டாம் திருமுறையாகிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரு நூல் தோன்றியதும், நாயன்மார்கள் ஒன்பதாம் திருமுறையைச் அருளிச்செய்ததும், திருவிசைப்பா முதலியவற்றை அருளிச் செய்தோர் வாழ்ந்ததும் சோழர் காலத்தில்தான். இலக்கியத்தில் சோழர் வரலாறு பெரிய அளவில் கூறப்பட்டாலும், அவை உண்மைதானா என்பது இலக்கியத்தைவிட கல்வெட்டுகளும் செப்பேடுகளும் அழியாப் புகழ்பெற்ற கோயில்களுமே ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றன.

சோழர்கள் கோலோச்சிய காலத்தை இவை விளக்குகின்றன. தஞ்சைத் தரணியைத் தலைநகராகக் கொண்டு சிறப்பாக ஆட்சி செய்த மாமன்னர் இராஜராஜசோழனின் புகழுக்கும் புத்திகூர்மைக்கும் தஞ்சைப் பெரியகோயிலே சாட்சி. இராஜராஜசோழனின் மைந்தன் இராஜேந்திர சோழனும், இராஜராஜனின் தீரத்துக்கு ஒப்பானவன். வட திசை நாடுகளை வென்று கங்கை நீரைக் கொணர்ந்து ‘கங்கை கொண்டான்’ என்ற சிறப்புப் பெயரை கொண்டவன். தமிழரின் வாழ்வியலில் வீரம் என்பது பிரிக்க முடியாத ஒன்று. சோழப் பேரரசின் சிறப்புகளையும் வீரத்தையும் தக்க ஆதாரங்களுடன் இந்த நூலில் ம.இராசசேகர தங்கமணி தந்திருக்கிறார்.

சோழர்களின் காலத்தை வரிசைப்படி சான்றுகளுடன் அளித்துள்ளார். வியத்தகு அரிய செய்திகளுடன் உருவாகியுள்ள இராஜேந்திர சோழனின் இந்த வரலாற்று நூல் அனைவரையும் கவரும். வரலாற்றில் வாழ்வோம், வாருங்கள்!