லெனின் சந்தித்த நெருக்கடிகள்
பயங்கரவாதம், போர், பேரரசு, காதல், புரட்சி
தாரிக் அலி எழுதிய லெனின் சந்தித்த நெருக்கடிகள் - ரஷ்யப் புரட்சி, லெனினியம் மற்றும் சோஷலிசத்தின் சவால்களைப் பற்றிய ஆழமான வரலாற்றுப் பார்வை.
| Category | History |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | தமிழ் |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
அக்டோபர் புரட்சியின் விளைவுகளில் ஒன்றான சோவியத் அரசு வீழ்ந்து பட்டது என்பது குறித்தான தெளிவான ஓர்மையுடன் உலகமெங்கும் இன்று சோஷலிச சக்திகள் எதிர்கொண்டு வரும் புதிய சூழல்களையும் நெருக்கடிகளையும் முன்னிறுத்தி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இது இந்நூலின் குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.
மாபெரும் ரஷ்யப் புரட்சியின் தலைவரான விளாதீமிர் லெனினது வாழ்க்கைக் காலத்தையும் அக்டோபர் புரட்சியின் வரலாற்றுச் சூழலையும் இந்நூல் தழுவி நிற்கிறது என்ற போதிலும்,இன்றைய சூழல்களுக்கு ஏற்ப அன்றைய நெருக்கடிகளைத் தகவமைத்து வழங்கும் பணியினை இந்நூலின் ஆசிரியர் மிக அற்புதமாக மேற்கொண்டு இந்நூலை உருவாக்கியுள்ளார். ரஷ்யப் புரட்சியும் லெனினும் அக்காலத்தில் சந்தித்த சில முக்கியமான நெருக்கடிகளைக் குறிப்பாக அடையாளப்படுத்தி, அவற்றைத் தனித்து எடுத்துக் கோட்பாட்டுத் தளத்தில் ஆசிரியர் விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
நூலின் ஆசிரியரான தாரிக் அலி பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்து மார்க்சியராக உருவாகியவர். பள்ளிப் பருவத்திலேயே முற்போக்கு எழுத்தாளர்களுடன் கவிதை அரங்கங்களில் பங்குகொண்டு உரத்த குரலில் மயகோவ்ஸ்கியின் கவிதைகளை வாசித்த அனுபவங்களை இன்றும் அவர் நினைவு கூர்கிறார். தாரிக் அலியின் குடும்பம் இங்கிலாந்து நாட்டுக்குக் குடிபெயர்ந்தபோது அவர் அங்கு ஒரு பிரிட்டிஷ் மார்க்சியர் ஆனார்.பிரிட்டிஷ் இடதுசாரி அரசியலில் நேரடிப் பங்கேற்பு கொண்டவராகவும் மத்தியக் கிழக்கு மற்றும் தெற்கு ஆசிய அரசியல்களில் அக்கறை கொண்டவராகவும் அவர் பரிணமித்தார். இரு அடிப்படை வாதங்களின் மோதல் என்ற அவரது நூல் இஸ்லாமியருக்கு எதிரான மேற்கத்தியப் பேரரசுகளின் சமீபத்திய ஆக்கிரமிப்புகளைத் தோலுரித்துக் காட்டும் நூல். லண்டனில் இருந்து வெளியாகும் நியூ லெஃப்ட் ரிவ்யூ பத்திரிக்கையின் நீண்ட கால ஆசிரியர் குழு உறுப்பினர்களில் தாரிக் அலியும் ஒருவர். நாடகம், திரைப்படம், நாவல் மற்றும் கவிதை இலக்கியங்களில் தாரிக் அலி தனது கனதியான பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.
குறைந்தபட்சம் நான்கு பிரச்சினைகளை இந்நூலில் தாரிக்அலி எடுத்துப் பேசியுள்ளார்.
முதல் பிரச்சினை:
பயங்கரவாதம்,வெகுமக்களியம்,அராஜகம் ஆகியவற்றிலிருந்து ரஷ்யாவில் லெனினியம் உருவான கதை.
இரண்டாவது பிரச்சினை:
நூலில் பேசப்படும் அடுத்த பிரச்சினை ரஷ்யாவில் 1917 அக்டோபருக்கு முந்திய மாதங்களில் சோசலிசப் புரட்சி எனும் வேலைத்திட்டம் உருவான வரலாற்றை நோக்கியது.
மூன்றாவது பிரச்சினை:
அக்டோபர் புரட்சியின் மற்றும் லெனினியத்தின் சர்வதேசப் பரிமாணங்கள் குறித்து இப்பகுதி பேசுகிறது.லெனினியமும் மூன்றாம் உலக நாடுகளும் சந்திக்கும் இடங்களையும் இப்பகுதி சுட்டிக் காட்டுகிறது.ஏகாதிபத்தியம்,சர்வதேசியம்,மூன்றாம் அகிலம்,உலகப் போர்கள்,தேசிய விடுதலை இலக்கியம் ஆகியவற்றை நோக்கிய புதிய வரையறைகளையும் இப்பகுதி வழங்குகின்றது.
நான்காவது பிரச்சினை:
அக்டோபர் புரட்சிக்கு முந்தியும் பிந்தியுமான ஆண்டுகளில் ரஷ்ய சமூக சனநாயக தொழிலாளர் கட்சியில் நேரடி அரசியல் செயல்பாட்டில்
ஈடுபட்ட பெரும் எண்ணிக்கையிலான பெண்களைப் பற்றியதாக தாரிக் அலியின் நூலின் இப்பகுதி அமைந்துள்ளது.
